பியாங்யங் : அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறிய நிலையில், வடகொரியா திடீரென ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையின் உடன்பாடு ஏற்படாததால் அவ்வப்போது ஏவுகணை சோதனையை நடத்தி வரும் வடகொரியா, சமீபத்தில் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறி இருந்தது.
வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை
இந்நிலையில் பியாங்யங் மாகாணத்தில் இருந்து கிழக்கு நோக்கி இன்று அதிகாலை இரண்டு ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள், 330 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து சென்றதாக தென்கொரிய ராணுவமும் குறிப்பிட்டுள்ளது. இதனை உறுதி செய்துள்ள தென் கொரியா ஊடகங்கள் பல்வேறு படங்களையும் வெளியிட்டுள்ளன. ஏவுகணைச் சோதனையின் போது, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்களுடன் உடன் இருந்தது படங்கள் மூலம் உறுதி ஆகியுள்ளது. சோதனை நடத்தப்பட்ட ஏவுகணையின் வகை குறித்த தகவல் இல்லை என்று தென்கொரியா கூறியுள்ளது.
அமெரிக்கா அதிருப்தி
வடகொரியா மற்றும் தென்கொரியா இடையேயான எல்லைப் பகுதியில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஜூன் மாதம் சந்தித்துப் பேசினர். அதன்பிறகு வடகொரியா ஏவுகணைகளை சோதனை நடத்தியிருப்பது இது 8வது முறையாகும்.அமெரிக்காவுடன் இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக வடகொரியா வெளியுறவுத் துறை இணையமைச்சர் சொ சன் ஹுஇ தெரிவித்திருந்தார். அவர் இவ்வாறு தெரிவித்த சில மணி நேரங்களில் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டுள்ளன.இந்த சூழலில் மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது அமெரிக்காவை அதிருப்தி அடைய வைத்துள்ளது.